

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டி குஜராத்தில் நடைபெற்றதாலும், பிரதமர் மோடி நேரில் பார்க்க சென்றதனாலும் இந்திய அணி தோல்வியடைந்ததாக அரசியல் சார்பில் விமர்சனம் வைக்கப்படுகிறது. மேலும், ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்யும்போது மிகவும் ஸ்லோவாக இருந்தது. பின்னர், இரவில் விளையாடும்போது பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது என்ற விமர்சனம் மெல்லமெல்ல எழுந்து வருகிறது.
ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல் காந்தி பிரதமர் "PM Means Panauti Modi" எனக் குறிப்பிட்டிருந்தார். "Panauti" என்றால் துரதிருஷ்டம் அல்லது துரதிருஷ்டத்தை வரவழைப்பவர் என்று அர்த்தம். இதற்கு பா.ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர அகிலேஷ் யாதவ் கூறுகையில் "உலகக் கோப்பை இறுதிப் போட்டி குஜராத்தில் நடைபெற்றது. இது லக்னோவில் நடைபெற்றிருந்தால் இந்திய அணிக்கு அதிக அளவில் ஆசீர்வாதம் (blessings) கிடைத்திருக்கும்.
லக்னோவில் போட்டி நடைபெற்றிருந்தால் கடவுள் விஷ்ணு மற்றும் வாஜ்பாய் ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கும். இந்தியா வெற்றி பெற்றிருக்கும். தற்போது, ஆடுகளம் குறித்த சில பிரச்சனைகளை கேட்க முடிகிறது" என்றார்.