

உத்தரப் பிரதேசம் கான்பூரிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் அதிவேக ரெயிலில் நேற்று இரவு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்துக்கொண்டிருந்தார்
பிரோசாபாத் நகரின் அருகே இரவு 8:00 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது சில சமூக விரோதிகள் ரெயிலை நோக்கிக் கற்களை வீசி எறிந்தனர். இதில் இ1 பெட்டி ஜன்னல் கண்ணாடி சேதமடைந்து உடைந்தது.
உடனடியாக ரெயிலில் இருந்த மோகன் பாகவத்தின் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அலர்ட் ஆகினர்.
கல்வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், மோகன் பாகவத் முழு பாதுகாப்புடன் உள்ளார் என்றும் ரெயில்வே வாரியம் உடனடியாக டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்குத் தகவல் அனுப்பியது.
தாமதமானாலும், ரெயில் திட்டமிட்டபடி இரவு 10:13 மணியளவில் டெல்லி சென்றடைந்தது.
சிறுவர்கள் விளையாட்டாகக் கல் வீசினார்களா, அல்லது மோகன் பாகவத் இந்த ரெயிலில் பயணிக்கிறார் என்பதை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.