மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் குறித்து நீதித்துறை விசாரணை: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் குழு கோரிக்கை

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும்.
போராட்டக்காரர்கள்
Published on

டெல்லியில் ஜூலை 20-ஆம் தேதியன்று மாணவர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து சுதந்திரமான நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என 93 ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அடங்கிய குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை சட்டவிரோதமாகவும், வரம்பு மீறியும் பலத்தை பயன்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 'அரசியலமைப்பு நடத்தை குழு' அழைப்பு விடுத்துள்ளது.

குழுவினர் விவரம்:

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.பி.கே. சிங் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த திங்களன்று நடைபெற்ற 'சன்சத் சலோ' பேரணியின் போதும் அதற்கு பின்னரும் டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடி படையினர் வரம்பு மீறிய பலத்தை பயன்படுத்தியதாகவும், இதனால் பல போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்த அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கையெழுத்திட்டவர்களில் டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஏ.எஸ். துலத், பஞ்சாபின் முன்னாள் டி.ஜி.பி. ஜூலியோ ரிபேரோ, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ் மந்தர் மற்றும் பல ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் அடங்குவர்.

அறுவை சிகிச்சை:

கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற ஒரு இளம் போராட்டக்காரருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்றும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும் என்றும் அந்த குழு கூறியது.

"டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள், போராட்டக்காரர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள், மின்சார தடியடிகள் மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக, கண் மற்றும் கழுத்தில் இருந்து பெல்லட்களை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்பட்ட ஒரு இளம் போராட்டக்காரர் உட்பட பல இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 வயது குழந்தையும் அடங்கும்," என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் இடையூறு:

முன்னாள் அரசு ஊழியர்கள் மேலும் கூறுகையில், பெயர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்றும் சாதாரண உடையில் இருந்தவர்கள் உட்பட பல டெல்லி காவல்துறை மற்றும் RAF வீரர்கள், ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளால் போராட்டக்காரர்களை "இரக்கமின்றி" தாக்கியதாக குற்றம் சாட்டினர்.

மேலும், குறைந்தது ஒரு காவலராவது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியதுடன், அந்த அதிகாரியை அடையாளம் கண்டு அவருக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தபோதிலும் போராட்ட இடத்திற்கு அருகில் "கற்கள் நிரம்பிய லாரி" ஒன்று இருந்தது குறித்தும், காவல்துறையினர் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்தும், மேலும் போராட்டக்காரர்கள் வளைத்து பிடிக்கப்பட்டு வழக்கறிஞர்களை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாமலேயே ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டனர் என்பது குறித்தும் அந்த கடிதம் கேள்வி எழுப்பியது.

X

Maalai Malar
www.maalaimalar.com