வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி- ஒரே பெயர் கொண்ட 79 பேர் நேரில் வந்து பாராட்டு

ஒரு சிறுமி தான் உண்டியலில் சேர்த்த ரூ.3000 பணத்தையும் வயநாடு நிலச்சரிவுக்கு வழங்கினார்.முஜிப் என்ற பெயர் கொண்ட 79 பேர் அங்கிருந்து 2 வாகனங்கள் மூலம் திண்டுக்கல் வந்தனர்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி- ஒரே பெயர் கொண்ட 79 பேர் நேரில் வந்து பாராட்டு
Published on

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் முஜிப். இவர் ரவுண்டு ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட்டு மாதம் 7ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தனது ஓட்டலில் மொய் விருந்து நடத்தினார்.

ஓட்டலுக்கு வந்தவர்களுக்கு அசைவ உணவு வழங்கியதுடன் விருந்தில் பங்கேற்பவர்கள் தங்களால் இயன்ற நிவாரண தொகையை இலைக்கு அடியில் வைத்து செல்லுமாறு கூறினார். இதனை ஏற்று மொய் விருந்தில் ஏராளமானோர் பங்கேற்று உதவிகள் அளித்துச் சென்றனர். இதில் ஒரு சிறுமி தான் உண்டியலில் சேர்த்த ரூ.3000 பணத்தையும் வயநாடு நிலச்சரிவுக்கு வழங்கினார்.

இதன் மூலம் கிடைத்த சுமார் ரூ.3.30 லட்சம் நிதியை முஜிப் மற்றும் ஓட்டல் அசோசியேசன் நிர்வாகிகள், ரோட்டரி சங்கத்தினர் கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயனை நேரில் சந்தித்து ஆகஸ்ட்டு 14-ந் தேதி வழங்கினர்.

அவரது இந்த சேவையை பாராட்டும் வகையில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த முஜிப் என்ற பெயர் கொண்ட 79 பேர் அங்கிருந்து 2 வாகனங்கள் மூலம் திண்டுக்கல் வந்தனர். அவர்களை ஓட்டல் உரிமையாளர் முஜிப் வரவேற்றார்.

மாநிலம் கடந்தும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய முஜிப்பை அவர்கள் பாராட்டி நினைவு பரிசு மற்றும் கேரள பாரம்பரியம் கொண்ட கேடயத்தை வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் தனது ஓட்டலில் முஜிப் தலைவாழை இலை விரித்து பிரியாணி மற்றும் பல்வகை அசைவ விருந்து வழங்கினார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com