மாநிலங்களவைத் தேர்தல்: ம.பி. காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு

வழக்குத் தொடரப்பட்டால் மட்டுமே பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும், நோட்டீஸ் அனுப்பப்பட்டதை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்பதால் இந்த நிராகரிப்பு செல்லாது.
மாநிலங்களவைத் தேர்தல்: ம.பி. காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு
Published on

மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவிருந்த, காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு தேர்தல் அதிகாரியால் இன்று (ஜூன்.9) நிராகரிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி நடராஜன் தனது வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில், தெலங்கானாவில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்த விவரங்களை மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து பாஜக வேட்பாளர் மகேஷ் கேவத் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்த நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தரப்பில் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது என்று மறுக்கப்பட்டுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் விவேக் தன்கா, மீனாட்சி நடராஜன் மீது எந்த ஒரு கிரிமினல் வழக்கோ அல்லது எஃப்.ஐ.ஆர்-ஓ பதிவு செய்யப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் இருந்து ஒரு விளக்கம் கேட்கும் நோட்டீஸ் மட்டுமே வந்துள்ளதாகவும், அதற்கு அவரது வழக்கறிஞர் பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணைய விதிகளின்படி வழக்குத் தொடரப்பட்டால் மட்டுமே பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும், நோட்டீஸ் அனுப்பப்பட்டதை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்பதால் இந்த நிராகரிப்பு செல்லாது என காங்கிரஸ் தெரிவிக்கிறது.

இதனால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 3 மாநிலங்களவை இடங்களையும் பாஜக எளிதாகக் கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com