என் மலர்
இந்தியா

பகவான் கிருஷ்ணரை முதல் மந்திரி வேண்டியதால் மழை பெய்கிறது: ராஜஸ்தான் மந்திரி சர்ச்சை பேச்சு
- பார்மர் மாவட்டத்தில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சனை பல ஆண்டாக நீடித்து வருகிறது.
- ஜோஜாரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
அங்குள்ள பார்மர் மாவட்டத்தின் பலோட்ரா பகுதியில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஜோத்பூர், பாலி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், ஜோஜாரி ஆற்றில் கலக்கின்றன.
அந்த ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது, தொழிற்சாலை கழிவுகள் மாசடைந்த நீராக கரையோர பகுதிகளில் தேங்குகின்றன. வீடுகளுக்கு உள்ளேயும் புகுந்து விடுகிறது. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், பார்மர் பகுதிக்குச் சென்ற ராஜஸ்தான் மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை மந்திரி கே.கே.விஷ்ணோயிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில், பார்மர் மாவட்டத்தில் பகவான் கிருஷ்ணர் மிகவும் தாராள மனதுடன் இருக்கிறார். நமது முதல் மந்திரி, பகவான் கிருஷ்ணரை வேண்டும் போதெல்லாம் இங்கு மழை கொட்டித் தீர்க்கிறது. பிறகு, இந்திரனிடம் சொல்லி, மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடர மழையை தணிக்க வேண்டி இருக்கிறது என தெரிவித்தார்.
கே.கே.விஷ்ணோயின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக, பார்மர் மாவட்டம் பேடூ தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஷ் சவுத்ரி கூறுகையில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சனையின் பொறுப்பை கடவுள்மீது சுமத்துவது கேலிக்கூத்தாக உள்ளது. மந்திரி, பிரச்சனையை திசைதிருப்புவது மட்டுமின்றி, பிரச்சனையை அரசாங்கத்தால் சரிசெய்ய முடியாது, பிரார்த்தனையால்தான் பலன் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் கூறுகிறார். இது அபத்தமானது என்றார்.






