சாதியே இல்லை என்றவர் மோடி.. ஏன் தன்னை OBC என்று கூறிக் கொள்கிறார் - ராகுல் சரமாரி கேள்வி?

'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.
சாதியே இல்லை என்றவர் மோடி.. ஏன் தன்னை OBC என்று கூறிக் கொள்கிறார் - ராகுல் சரமாரி கேள்வி?
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ஜதல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் சரமாரி கேள்விகளை கேட்டார்.

"பா.ஜ.க. தலைவர்கள் தங்களது பேச்சுகளில் 'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தான் வனவாசி என்ற வார்த்தையை உருவாக்கி உள்ளனர். வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது."

"மத்திய பிரதேச மாநிலத்தில், பா.ஜ.க. தலைவர் ஒருத்தர், பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்து, அதே சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை வைரலாக்கினார். இது தான் பா.ஜ.க.-வின் மனநிலை. அவர்கள் உங்களது பகுதியை விலங்குகள் வசிக்கும் காடாக நினைத்து, உங்களையும் விலங்குகளை போன்றே நடத்துகின்றனர்."

"நாட்டில் தலித், ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இருப்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நாட்டில் ஒரே ஒரு சாதி தான் இருக்கிறது என்றால், அவர் ஏன் தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று கூறிக் கொள்கிறார்?," என்று ராகுல் காந்தி பேசினார்.

முன்னதாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள ஒரே சாதி ஏழ்மை தான் என்று தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் போது தான் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com