

பாட்னா :
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ், சமீப காலமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் பெரும்பாலும் டெல்லியிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது.எனவே தனது உடல் நலம் காரணமாக கட்சித்தலைவர் பொறுப்பை இளைய மகனும், அவரது அரசியல் வாரிசாக கருதப்படுபவருமான தேஜஸ்வி யாதவிடம் ஒப்படைக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்த வாரம் நடைபெறும் கட்சியின் முக்கிய கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
இது குறித்து லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ரப்ரி தேவியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரப்ரி தேவி, ‘அது தவறான தகவல்’ என கூறினார். இதன் மூலம் லாலு பிரசாத் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் பதவியில் இருந்து விலக வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.