

உத்தர பிரதேசத்தில் 59 தொகுதிகளில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. கான்பூர் தொகுதியில் உள்ள சன்னிகஞ்ச் வாக்கு சாவடியில் வாக்காளர்கள் கூட்டம் காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்தனர். காலை 11 மணி நிலவரப்படி 3 ஆம் கட்ட தேர்தலில் 21.18 சதவீத வாக்குகள் பதிவாகின.
சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவ், ஜஸ்வந்த்நகரில் உள்ள சைஃபாய் பகுதி வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தார்.அவரது மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜஸ்வந்த்நகரில் உள்ள வாக்குச் சாவடியில் தமது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் இரண்டு கட்ட தேர்தல்களில் நாங்கள் செஞ்சரி அடித்துள்ளாம், இந்த தேர்தலிலும் சமாஜ்வாடி கூட்டணி அனைத்துக் கட்சிகளையும் விட முன்னிலையில் இருக்கும் என்று தெரிவித்தார்.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக காலை 8 மணிமுதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 17.77 சதவீத வாக்குகள் பதிவானது.
சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர்களில் ஒருவரான ஹர்சிம்ரத் கவுர் பாதல்,தமது வாக்கினை பதிவு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்று மக்கள் நிலையான, வலுவான அரசை விரும்புகிறார்கள். எல்லை மாநிலமான பஞ்சாப்பிற்கு பல சவால்கள் உள்ளன.
உள்ளூர் மக்களின் விருப்பங்களை புரிந்துகொள்ள முயற்சிக்கும் கட்சிக்கு ஆதரவாக தூய்மையான வெற்றி கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ஒரே உடல் இரண்டு வாக்கு- பஞ்சாப் தேர்தலில் வாக்களித்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்