என் மலர்
இந்தியா

ட்ரீம் லெவன் மூலம் கோடி...! பின்னாடியே வந்தது சஸ்பெண்ட்...! சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த சம்பவம்
- ட்ரீம் லெவன் செயலி மூலம் ஒன்றரை கோடி ரூபாய் வென்றுள்ளார்
- போலீஸ் யுனிஃபார்ம் உடன் பேட்டியளித்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை
கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்கள் தற்போது கிரிக்கெட் போட்டிகளை பார்க்கிறார்களோ... இல்லையோ... பெட்டிங் கட்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். டாஸ் சுண்டப்பட்டதும், ட்ரீம் லெவன் போன்ற செயல்களில் அணியைத் தேர்வு செய்கிறார்கள்.
இப்படி தேர்வு செய்யப்படும் வீரர்கள் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டால், அந்த வீரர்கள் அவர்கள் தேர்வு செய்த அணியில் இடம் பிடித்திருந்தால் அதற்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்பட்டு பரிசு வழங்கப்படும். இதில் ட்ரீம் லெவன் செயலி முன்னணியாக விளங்கி வருகிறது.
எப்படியாவது கோடீஸ்வரராக வேண்டும் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த செயலியில் விளையாடி வருகிறாரக்ள்.
இப்படி இந்த செயலில் விளையாடியவர்தான் மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சோம்நாத் ஷிண்டே. இவர் ட்ரீம் லெவன் அணியை தேர்வு செய்ததன் மூலம் 1.5 கோடி ரூபாய் வென்றுள்ளார். சோம்நாத் ஷிண்டே, ட்ரீம் லெவனில் விளையாடி கோடீஸ்வரராகிய சம்பவம் அந்தப் பகுதியில் காட்டுத்தீயாக பரவியது.
மேலும், காவல்துறைக்கு இந்த தகவல் எட்டியது. உடனடியாக அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் சோம்நாத் ஷிண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தவறான நன்னடத்தை மற்றும் காவல்துறையின் பெயருக்கு தீங்கு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் எந்தவித அனுமதியும் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபபட்டது, போலீஸ் உடையுடன் பேட்டியளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தற்போது சோம்நாத் கோடீஸ்வரராகிய நிலையில், சஸ்பெண்ட் அவரை மிகப்பெரிய அளவில் காயப்படுத்தாது எனலாம்.






