

மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இரண்டு பேர் உயிரிழந்ததை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்ணீரில் விழுந்த மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.
இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.
இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.