என் மலர்
இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு - நீதிமன்றம் அதிரடி
- 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- தாத்தா தேவகௌடா அறிவுரையை ஏற்று நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.
ஆனால் கடந்த வருடம் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற அவர், தாத்தா தேவகௌடா அறிவுரையை ஏற்று மே 31 தேதி நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது.
அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(n)-ன் கீழ் (பாலியல் வன்கொடுமை) குற்றத்திற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. மொத்த அபராதத் தொகையான ரூ.10 லட்சத்தில், ரூ.7 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






