அமேதி செல்லும் ராகுல் காந்தியை விமர்சித்து பரபரப்பு சுவரொட்டிகள்

ராகுல்காந்தியையும், இந்தியா கூட்டணி தலைவர்களையும் விமர்சித்து அமேதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.சுவரொட்டிகளில், இந்தியாவின் கை பாகிஸ்தானுடன் உள்ளது என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது.
அமேதி செல்லும் ராகுல் காந்தியை விமர்சித்து பரபரப்பு சுவரொட்டிகள்
Published on

அமேதி:

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேசம் சென்றுள்ளார்.

அங்கு தனது சொந்த தொகுதியான ரேபரெலிக்கு சென்ற ராகுல்காந்திக்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக ராகுல்காந்தி இன்று அமேதி தொகுதிக்கு செல்கிறார். இந்நிலையில் ராகுல்காந்தியையும், இந்தியா கூட்டணி தலைவர்களையும் விமர்சித்து அமேதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பஹல்காமில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விமர்சித்தனர். மேலும் மோடியை கேலி செய்து படம் ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் எக்ஸ்தள பக்கத்தில் பகிரப்பட்டது. இதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று ராகுல்காந்தி அமேதி செல்லும் நிலையில் உத்தரபிரதேச நகரம் மற்றும் அமேதி பகுதிகளில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டி வார் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டதாக கூறி அவர்களை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டிகளில், இந்தியாவின் கை பாகிஸ்தானுடன் உள்ளது என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com