அரசியல் கட்சியினர் ஹெலிகாப்டரில் தீவிர பிரசாரம் - ஒருநாள் வாடகை ரூ.30 லட்சம்

நட்சத்திர பேச்சாளர்களுக்கு ஹெலிகாப்டர் தேவை கட்டாயமாகிறது.தனியார் நிறுவனங்களால் வாடகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது.
அரசியல் கட்சியினர் ஹெலிகாப்டரில் தீவிர பிரசாரம் - ஒருநாள் வாடகை ரூ.30 லட்சம்
Published on

திருப்பதி:

பாராளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் மாநிலம் விட்டு மாநிலங்கள் செல்வதற்காக வாடகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

நட்சத்திர பேச்சாளர்கள் ஒரு நாளைக்கு பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்வதால் ஹெலிகாப்டர் தேவை கட்டாயமாகிறது.

இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஹெலிகாப்டர்களுக்காக அரசியல் கட்சிகள் செலவு செய்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஹெலிகாப்டர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ. 6.5 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இது கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

குறிப்பாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகளவில் வாடகை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களை பொருத்தவரை தெலுங்கானா மாநிலத்தில் தான் அதிக அளவில் பிரசாரத்திற்கு வாடகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மற்ற தென் மாநிலங்களில் இந்த அளவு ஹெலிகாப்டர்கள் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்களால் வாடகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது.

பிரசாரத்தின் கடைசி நாள் வரை ஹெலிகாப்டர்கள் வாடகைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com