மலேசியா பிரதமராக பதவியேற்ற அன்வார் இப்ராகிமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்.புதிய பிரதமராக பதவியேற்ற அன்வார் இப்ராகிமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

மலேசியாவில் 222 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான 15- வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. 75 வயதான முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி சனிக்கிழமை நடந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களில் 82 இடங்களை வென்றது. இந்தத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக மலாய் இனத்தைச் சார்ந்த முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 72 இடங்களை வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இதற்கிடையே, ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு, அன்வார் தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டதன் மூலம் நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது.

மலேசிய பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், சீர்திருத்தவாத தலைவர் அன்வார் இப்ராகிமை, புதிய பிரதமராக மலேசிய மன்னர் நியமித்தார். நேற்று மாலை நடைபெற்ற விழாவில் மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற அன்வார் இப்ராகிமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மலேசியாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். இந்தியா-மலேசியா மேம்படுத்தப்பட்ட மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com