போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

இருநாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடி நேரிலும் வலியுறுத்தினார்.
போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டரை ஆண்டு கடந்துள்ளது. இந்தப் போர் குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது.

இரு நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடி நேரிலும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, இத்தாலியில் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியைச் சந்தித்த ஜெலன்ஸ்கி, அவரை உக்ரைன் வருமாறு அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அதன்படி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த 22-ம் தேதி புறப்பட்டு போலந்து சென்ற அவர், அங்கே 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து, ரெயில் மூலமாக உக்ரைனுக்குச் சென்றார். அங்கு உக்ரைன் அதிபரைச் சந்தித்துப் பேசினார். உக்ரைன் அதிபருடனான சந்திப்பின்போது, பிராந்தியத்தில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என உறுதி அளித்தார்.

இந்நிலையில், போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தை நிறைவுசெய்து பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்பினார். தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com