search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது பொருத்தமற்றது: பினராயி விஜயன்
    X

    ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது பொருத்தமற்றது: பினராயி விஜயன்

    • பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல்காந்தியை வயநாட்டில் நிறுத்துவது பொருத்தமற்றது.
    • காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த இரு கட்சிகளும் கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.

    கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதே வேளையில் இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பமான சூழல் நிலவுகிறது.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அதே வேளையில் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

    வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடுவதால், ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கேட்டுக்கொண்டது. ஆனால் அதனையும் மீறி ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்தது.

    இது கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தை, தான் முன்னெடுப்பதாக கூறும் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு எதிராக ஏன் போட்டியிடுகிறார்? என்று டி.ராஜா கேள்வி எழுப்பினார்.

    வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதற்கு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தபடி உள்ளனர். மேலும் தேசிய அளவில் ஒரே கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் ஒரே தொகுதியில் தனித்தனியாக மல்லுக்கட்டுவது மற்ற கட்சிகளின் மத்தியிலும் பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது.

    இந்நிலையில் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பொருத்தமற்றது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கோழிக்கோட்டில் ஆனி ராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல்காந்தியை வயநாட்டில் நிறுத்துவது பொருத்தமற்றது. அவர் கேரளாவில் முக்கிய அரசியல் சக்தியாக இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போராடுவதற்காக வந்துள்ளார்.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி தலைவர் ஆனி ராஜாவுக்கு எதிராகவும் ராகுல்காந்தி போட்டியிடுவது என்ன நியாயம்? அவர் வயநாட்டில் பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது. கலால் கொள்கை தொடர்பாக டெல்லி அரசுக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளித்தது. இந்த நடவடிக்கை இறுதியில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையில் முடிந்தது.

    குடியுரிமை திருத்த சட்டம் போன்ற கொள்கைகளால் இந்தியாவில் மதச்சார்பின்மையை பாரதிய ஜனதா அரசு அழித்து வருகிறது. ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்தார். ஆனால் அவர் சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

    Next Story
    ×