

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதியாக பிடிக்கப்படும். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் தொகை எவ்வளவோ, அவ்வளவு தொகை நிறுவனமும் செலுத்தும். இதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட வட்டி வழங்கும்.
வேலையில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் உதவும். தற்போது புதிய பென்சன் திட்டத்தின்படி நிறுவனம் அளிக்கும் பங்கீட்டில் மிகப்பெரிய தொகை பென்சனுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது.
தற்போது வீடு கட்ட வேண்டும் அல்லது அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்றால் இணைய தளம் மூலம் ரிஜிஸ்டர் செய்து பணத்தை எடுக்க முடியும்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டில் இருந்து ஏடிஎம் மெஷின்களில் வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுக்கும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உரிமை கோருபவர்கள், பயனாளிகள் அதிகப்பட்டியான மனிதர்கள் தலையீடு இல்லாமல் இனிமேல் பணத்தை எடுக்க முடியும்.
அடுத்த ஆண்டு ஐ.டி. 2.1 மேம்படுத்தல் நடைமுறைக்கு வந்தவுடன் EPFO இன் ஐ.டி. உள்கட்டமைப்பு வங்கி அமைப்புகளுக்கு இணையாக இருக்கும். இதனால் அவர்கள் எளிதாக பணத்தை பெற முடியும். உரிமைகோரல் தீர்வை எளிமையாக்க எங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்பை மேம்படுத்துகிறோம். ஏடிஎம்கள் மூலம் வருங்கால வைப்பு நிதியை எடுப்பது விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சக செயலாளர் சுமிதா தவ்ரா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட உடன் பணத்தை எடுப்பதற்கான கார்டு வழங்கப்படும். இது வங்கிகள் வழங்கும் ஏடிஎம் கார்டுகள் போன்று இருக்கும். எனினும் மொத்த தொகையில் 50 சதவீதம் வரை மட்டுமே எடுக்க முடியும்.
பணத்தை எடுக்கும் முறையில் மாற்றம் ஏதும் இல்லை. வேலையில் இருக்கும்போது பணத்தை எடுக்க முடியாது. வேலையில் இருந்து நின்று ஒரு மாதத்திற்குப் பிறகு 75 சதவீதம் பணத்தை எடுக்கலாம். அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து மீதமுள்ள பணத்தை பெறலாம்.