

மக்களவையில் இன்று அலுவல் நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர் அரங்கில் இருந்து இருவர் அவையின் மத்தியில் குதித்து ஓடினர். அவர்கள் கைகளில் கண்ணீர் புகை குண்டு இருந்தது. கோஷமிட்டு கொண்டே சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் அதை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை எழும்பியது.
இச்சம்பவத்தால் சில உறுப்பினர்கள் அச்சத்துடன் அங்குமிங்கும் ஓடினர். சில நொடிகளில் அந்த இருவரும் பிடிக்கப்பட்டு பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பெரும் பாதுகாப்பு குளறுபடியாக விமர்சிக்கப்படும் இந்த சம்பவம் குறித்து அவை தலைவராக இன்று இருந்த பா.ஜ.க. எம்.பி. ராஜேந்திர அகர்வால் தெரிவித்ததாவது:
பாதுகாப்பு குளறுபடிகள் கண்டிப்பாக இருக்கிறது. முதல் நபர் இறங்கி ஓடி வந்த போது எவரோ தவறி விழுந்ததாக கருதப்பட்டது. இரண்டாவதாக ஒருவர் வந்ததும் நாங்கள் அனைவரும் எச்சரிக்கையடைந்தோம். ஒரு நபர் தனது காலணியை கழற்ற முற்பட்டது போல் இருந்தது. அதிலிருந்து எதனையோ எடுத்தார். உடனே புகை வெளிக்கிளம்பியது. நிச்சயம் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகரும் இதற்கான பொறுப்பில் உள்ளவர்களும் இது குறித்து முடிவு எடுப்பார்கள். இது நடக்கும் போதே ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்து வந்து விட்டார்.
இவ்வாறு அகர்வால் தெரிவித்தார்.