

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட அனைவரும் ஆண்கள் ஆவார்கள். இந்த தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய அரசு பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளது.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதம் உலகளாவிய அச்சுறுத்தல் என்பதற்கான கடுமையான நினைவூட்டல் என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டின்போது ஜக்தீப் தன்கர் கூறியதாவது:-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதம் என்பது மனித குலத்தால் ஒற்றுமையாகக் கையாளப்பட வேண்டிய ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்பதற்கான கொடூரமான நினைவூட்டல். மக்கள் அரசியல், தனிப்பட்ட மற்றும் பிற நலன்களுக்கு அப்பாற்பட்டு தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உலகின் மிகவும் அமைதியை விரும்பும் நாடு இந்தியா. உலகத்தை ஒரு குடும்பமாகப் பார்க்கும் இந்தியாவின் கோட்பாடு உலகளாவிய ஏற்புடையதாக இருக்கிறது.
இவ்வாறு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.