search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க எம்.பி.க்கு எதிராக தெருவில் போராட்டம் இல்லை: சட்டப்படியே சந்திப்போம்- மல்யுத்த வீராங்கனைகள் அறிவிப்பு
    X

    பா.ஜ.க எம்.பி.க்கு எதிராக தெருவில் போராட்டம் இல்லை: சட்டப்படியே சந்திப்போம்- மல்யுத்த வீராங்கனைகள் அறிவிப்பு

    • டெல்லி போலீசார் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருந்தனர்.
    • இந்திய மல்யுத்த சம்மேளன சீர்திருத்தம் குறித்து வாக்குறுதி அளித்தபடி தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண்சிங் உள்ளார்.

    பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் பாலியல் புகார் கூறி இருந்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தாலும் கைது செய்யவில்லை.

    இதைத்தொடர்ந்து பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற அவர்களை நடத்திய விதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேச்சு வார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    டெல்லி போலீசார் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருந்தனர். இதேபோல இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கும் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக கடந்த 5 மாதம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீராங்கனைகள் இனி தெருவில் போராட்டத்தில் ஈடுபட போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் சட்ட போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

    வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் இதுதொடர்பாக டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வாக்குறுதியை அரசு நிறைவேற்றியுள்ளது. எனவே நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் தொடரும். ஆனால் எங்கள் போராட்டம் இனி தெருவில் இருக்காது சட்ட போராட்டம் தான் நடைபெறும்.

    இந்திய மல்யுத்த சம்மேளன சீர்திருத்தம் குறித்து வாக்குறுதி அளித்தபடி தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன. ஜூலை 11 தேர்தல் தொடர்பாக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை காத்திருப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு கவுகாத்தி கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

    Next Story
    ×