என் மலர்
இந்தியா

தடையின்றி வங்கி சேவை கிடைக்க வேண்டும்: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
- வங்கித்துறைகளின் செயல்பாடு குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்நிலையில், வங்கித் துறைகளின் செயல்பாடு குறித்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை அதிகாரிகளுடன் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
எந்தவொரு நெருக்கடி அல்லது அசாதாரண சூழ்நிலையை கையாளும் வகையில் அனைத்து வங்கிகளும் தயாராக இருக்க வேண்டும்.
குடிமக்களுக்கும், வணிக நிறுவங்களுக்கும் வங்கி மற்றும் நிதி சேவைகள் எந்த இடையூறும் இன்றி தடையின்றி கிடைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
மக்களுக்கு நேரடியாக வங்கி சேவையும், டிஜிட்டல் சேவைகளும் கிடைக்க செய்வதுடன், ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் இருக்க வேண்டும்.
யு.பி.ஐ. மற்றும் இணையதள சேவைகள் தங்கு தடையின்றி தொடர வேண்டும்.
அசாதாரண சூழல்களை சமாளிப்பது குறித்த முன்னெச்சரிகை நடவடிக்கைகளை ஒத்திகை செய்து பார்க்க வேண்டும்.
எல்லைப் பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைப்புகளுடன் வங்கிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.