என் மலர்tooltip icon

    இந்தியா

    இனி நோ க்யூ... திருப்பதியில் லட்டு வாங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
    X

    இனி நோ க்யூ... திருப்பதியில் லட்டு வாங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

    • தரிசன டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வாங்கும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
    • விரைவில், வி.ஐ.பி தரிசன டிக்கெட்டுகளை இதே ஏந்திரத்தின் மூலமாக பெறும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று பணம் செலுத்தி லட்டுகளை வாங்கி செல்கின்றனர்.

    இந்தநிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் லட்டுக்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லாத ஒரு புதிய முறையை தேவஸ்தானம் செயல்படுத்த உள்ளது. அதில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் டிஜிட்டல் முறையில் லட்டுகளைப் பெறலாம்.

    இதற்காக தொழில்நுட்பத்தின் உதவியுடன் டிஜிட்டல் லட்டு கொள்முதல் முறையைத் தொடங்க உள்ளது.

    இந்த புதிய முறையில், பக்தர்கள் தங்கள் தரிசன டிக்கெட் எண்ணை அதற்கென வைக்கப்பட்டுள்ள எந்திரத்தில் பதிவு செய்து, தங்களுக்குத் தேவையான லட்டுகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து, யூ.பி.ஐ. அல்லது பிற டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தி லட்டுக்கான டிக்கெட்டை பெறலாம்.

    மேலும், தரிசன டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வாங்கும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. அவர்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்வதன் மூலம் 2 லட்டுகளை வாங்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. இருப்பினும், எதிர் காலத்தில், இந்த வரம்பை 4 லட்டுகளாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரிசன டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வருபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    தற்போது, யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கியின் கீழ் லட்டு கவுண்டரில் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.பி.சி. விசாரணை மையத்தில் மேலும் 3 எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இத்துடன் மேலும் சி.ஆர்.ஓ. அலுவலகம், பத்மாவதி விருந்தினர் மாளிகை மற்றும் விருந்தினர் மாளிகைகளிலும் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. விரைவில், வி.ஐ.பி தரிசன டிக்கெட்டுகளை இதே ஏந்திரத்தின் மூலமாக பெறும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    Next Story
    ×