என் மலர்
இந்தியா

புதிய வருமானவரி மசோதா பாராளுமன்றத்தில் நாளை தாக்கல்?
- புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது பாராளுமன்றத்தின் நிதி நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும்.
- வரிச் சுமையை குறைப்பதுடன், விதிகள் எளிமையான வாக்கியங்களில் இருக்கும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் கடந்த 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் புதிய எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா மக்களவையில் நாளை (13-ந்தேதி) தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 622 பக்கங்களை கொண்டதாக இந்த மசோதா இருக்கும் என்று தெரிகிறது.
புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது பாராளுமன்றத்தின் நிதி நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும். குழு தனது பரிந்துரைகளை வழங்கிய பின்னர், அவற்றில் திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பது குறித்து மீண்டும் மந்திரிசபை முடிவு எடுக்கும்.
மொழி எளிமைப்படுத்தல் சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், புரிந்து கொள்ள எளிதாகவும் மாற்றும் என்றும், இது சர்ச்சைகள், வழக்குகளைக் குறைக்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு அதிக வரி உறுதிப்பாட்டை வழங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய மசோதா நேரடி வரி சட்டங்களை புரிந்து கொள்வதை எளிதாக்கும். வரிச் சுமையை குறைப்பதுடன், விதிகள் எளிமையான வாக்கியங்களில் இருக்கும்.






