

நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றால் நாட்டின் கல்வித் துறையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்ற நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன.
இதனை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அமைப்புகளாகவும், தன்னிச்சையாகவும் வந்து கலந்துகொண்டு 1 மாத காலமாக போராடி வருகின்றனர்.
குறிப்பாக இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.
சற்று நேரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி, தொடரின் முன் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம், தொடரை ஆக்கபூர்வமாக நடத்த எதிர்கட்சியினரை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
இந்த சூழலில் பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டிய டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
தடைகள் இருந்தபோதிலும் ஜந்தர் மந்தரில் அதிகளவில் கூடியுள்ள இளைஞர்கள் பேரணியை தொடங்க மும்முரம் காட்டி வருகின்றனர்.
எதனாலும் கரப்பான்பூச்சிகளை தடுக்க முடியாது என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரணிக்காக மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனுப்பியுள்ளார்.
இந்த பேரணியில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ஜந்தர் மந்தர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பேரணியை அமைதியான முறையில் நடத்துமாறு சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ அழைப்பு விடுத்துள்ளார்.
சோனம் வாங்சுகை போல இந்த போராட்டத்தில் கடந்த 23 நாட்களாக அகில இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 3 மாணவ செயல்பாட்டார்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இன்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.
அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்த நிலையில் இன்று போராட்ட களத்திற்கு வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் மூத்த நடிகை ஷாபனா அஸ்மி, எம்.பி. மனோஜ் ஜா, அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் நீண்ட அறிவுறுத்தலின் பேரில் அம்மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.
தனது நிபந்தனைகளை ஏற்றால் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக சோனம் வாங்சுக் முன்னதாக மருத்துவமனையில் இருந்து செய்தி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.