டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காரணம் கூறாமல் 3 மாதங்கள் சிறையில் அடைக்கலாம்!

பொது ஒழுங்கைப் பேணுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில், அதிகாரிகள் தடுப்புக் காவலுக்கு உத்தரவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Delhi NSA extension amid NEET protests
Published on

டெல்லி காவல்துறை ஆணையருக்கு, 1980 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் மூன்று மாத காலத்திற்கு, தடுப்புக் காவல் அதிகாரியின் அதிகாரங்களைப் பயன்படுத்த டெல்லி உள்துறை அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அதிகாரம் ஜூலை 19, 2026 முதல் அக்டோபர் 18, 2026 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தனி நபர்களை காரணம் கூறாமல் 3 மாதம் வரை சிறையில் அடைக்க முடியும்.

பொது ஒழுங்கைப் பேணுதல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகிய நிகழ்வுகளில், நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தடுப்புக் காவல் சட்டத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்:

இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த அறிவிப்பு என்பது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களை, காலாண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கும் ஒரு வழக்கமான செயல்முறை ஆகும்.

இது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் புதுப்பிக்கப்படுகிறது.

தற்போதைய புதுப்பித்தல் உத்தரவு, சிஜேபி போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே, 07.07.2026 அன்று, 19.07.2026 முதல் 18.10.2026 வரையிலான காலத்திற்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில், டெல்லி காவல்துறை ஆணையர், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரிவு 3, துணைப் பிரிவு (2)-இன் கீழ் தடுப்புக் காவல் அதிகாரங்களையும் பயன்படுத்தலாம்.

சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக எந்தவொரு சிறப்பு கோரிக்கையோ அல்லது உத்தரவோ தொடங்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த அறிவிப்பு, தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களுடன் தொடர்புடையது கிடையாது. சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம்” என்றும் காவல்துறை கூறியுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேசிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றும் வரும் சூழலில், இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இணையத்தில் பரவலான யூகங்கள் பரவி வரும் நிலையில் இந்த விளக்கத்தை காவல்துறை அளித்துள்ளது.

டெல்லி மாணவர்கள் போராட்டம் பின்னணி:

காக்ரோச் ஜனதா கட்சியால் வழிநடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள், இந்த வாரத் தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது தீவிரமடைந்தன, இது காவல்துறையினருடன் மோதல்களுக்கு வழிவகுத்தது.

தேர்வு சீர்திருத்தங்கள், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தேர்வுத்தாள் கசிவைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஆகியவற்றை போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தேர்வுத்தாள் கசிவுகள் காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், பின்னர் அரசாங்கத்தின் மீதும், வேலையின்மை மற்றும் இளம் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டும் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com