

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளி அமைந்துள்ளது.
இங்கு பயிற்சியை முடித்த விமானி ஒருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டருக்கு முன்னால் தனது காதலியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ப்ரோபோஸ் செய்தது சர்ச்சையாக மாறியுள்ளது.
கடந்த ஜூன் 2ஆம் தேதி, பயிற்சி விமானிகள் ராணுவப் பயிற்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்களின் பிரியாவிடை அணுவகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அப்போது தனது பயிற்சியை முடித்த கேப்டன் பரத் பரத்வாஜ் என்ற விமானி, ராணுவ சீருடையில் ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டர் நோக்கி நடந்து வந்தார்.
அங்கு நின்றுகொண்டிருந்த தனது காதலியான ஆருஷி என்பவரின் முன்னால் மண்டியிட்டு, திருமண மோதிரத்தை நீட்டி தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஆருஷியும் உடனடியாக அவரது காதலை ஏற்றுக்கொண்டார்.
அங்கிருந்த குடும்பத்தினரும், சக ராணுவ அதிகாரிகளும், பயிற்சியாளர்களும் கைதட்டி ஆரவாரம் செய்து தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் ராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் இந்தச் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ ராணுவச் சடங்குகள் நடைபெறும் ஒரு உயர் பாதுகாப்பு மண்டலத்திலும், நாட்டின் முக்கியப் பாதுகாப்பு உபகரணமான போர் ஹெலிகாப்டரின் அருகிலும், இது போன்ற தனிப்பட்ட கொண்டாட்டங்களை நிகழ்த்துவது கடுமையான ராணுவ ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறைகளின் மீறல் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஒழுங்கீன நடவடிக்கைக் காரணமாக, கேப்டன் பரத் பரத்வாஜிற்கு விரைவில் விளக்கம் கேட்டு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளக்கம் திருப்தியளிக்காத பட்சத்தில் அவருக்கு தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.