

நாகா இனத்தைச் சேர்ந்த 19 ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் இன்று ஏலம் விடப்பட உள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ [Neiphiu Rio] மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறந்தவரின் உடல் மீதிகள் நாகா இனத்தவருக்கே சொந்தம் என்றும் இது தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவரின் மண்டை ஓட்டை ஏலம் விடும் இந்த மனிதத்தன்மை அற்ற செயல் மன ரீதியாக நாகா இனத்தவரின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாக உள்ளது என்று நாகாலாந்து முதல்வர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின்போது நாகா இனத்தவர் சந்தித்த கொடுமைகளை இந்த ஏலம் பிரதி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று ஏலத்தில் வரும் இந்த மண்டை ஓடானது பிரிட்டன் நாணயம் மதிப்பில் 3500 முதல் 4000 பவுண்டுகள் [சுமார் 4 லட்சம் ரூபாய்] வரை மதிப்புடையது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலம் தொடர்பாக நாகா மக்கள் நல்லிணக்க அமைப்பான [FNR] தெரியப்படுத்தியதை அடுத்து நாகாலாந்து முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மாநில கட்சியான NDPP ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.