search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழில் படித்ததால் தான் விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது: மயில்சாமி அண்ணாதுரை
    X

    தமிழ் புத்தக திருவிழா சிறப்பு மலரை மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்ட போது எடுத்த படம்.


    தமிழில் படித்ததால் தான் விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது: மயில்சாமி அண்ணாதுரை

    • நமது தாய் மொழியை மறக்க கூடாது.
    • அந்த தாய் மொழி தான் உயரத்தை தொட உதவி உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழ் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நடந்த விழாவை, விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர், பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி தவமணி, சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிஸ்வான் ஹர்ஷத், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் ஆனந்த்குமார் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து தமிழ் புத்தக திருவிழா குறித்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் தனாபிவிருத்தி கடன் கூட்டுறவு வங்கியின் நிறுவனர் சுந்தரவேலு, ஆர்.ஆர்.இன்டஸ்டரீஸ் தலைவர் துரை, தமிழ் புத்தக திருவிழா குழு தலைவர் வணங்காமுடி, கர்நாடக தமிழ்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்க தலைவர் தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் 'தினத்தந்தி' உள்பட 25 புத்தக அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராம்பிரசாத் மனோகர் பேசுகையில் கூறியதாவது:-

    தமிழ் புத்தக திருவிழாவை தலைமை ஏற்று நடத்த எனக்கு வாய்ப்பு கொடுத்த விழா குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த விழா ஒரு புத்தக திருவிழா மட்டும் இல்லை. நமது உறவுகளை புதுப்பித்து கொள்ளும் விழா.

    கர்நாடகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் நான் தமிழ் பேசுகிறேன் என்று சொல்லி கொள்ளவே தயங்குகின்றனர். இந்த விழாவை தலைமை ஏற்று நடத்த சிலர் தயங்கினர். ஆனால் நான் தலைமை ஏற்கிறேன் என்று கூறினேன். தமிழ் என்பது எனது முகம், தமிழ் என்பது எனது அடையாளம். தமிழ் எனது முகவரி. எனது முகவரியை மறைத்து வாழ வேண்டிய தவறை நான் செய்யவில்லை. நான் தைரியமாக, சந்தோஷமாக, ஆர்வமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.

    சிலர் என்னிடம் தமிழ் மொழியில் படித்து எப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனீர்கள் என்று கேட்டது உண்டு. அவர்களிடம் நான் தமிழ் மொழியில் படித்ததால் தான் நான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனேன் என்று பெருமையுடன் கூறி இருக்கிறேன். தாய் மொழி உணர்வு பூர்வமானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில் கூறியதாவது:-

    புதிய முயற்சியாக, புதிய நம்பிக்கையாக இன்று ஆரம்பித்து உள்ள முதல் தமிழ் புத்தக திருவிழா உண்மையில் நம்பிக்கை தருகிறது. தமிழ் எனது அடையாளம், தமிழ் எனது முகம் என்று ராம்பிரசாத் மனோகர் உணர்ச்சிபூர்வமாக பேசினார். எனது முகவரி தமிழகம் என்றாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பெங்களூருவில் தான் உள்ளேன். நான் எழுதிய 7 புத்தகங்களும் பெங்களூருவில் வைத்து தான் எழுதப்பட்டது. நமது தாய் மொழியை மறக்க கூடாது. வேர்களாக இருக்கும் மொழியை மறக்க கூடாது. அந்த மொழி நமது தாய். அந்த தாய் மொழி தான் உயரத்தை தொட உதவி உள்ளது.

    நான் முழுக்க படித்தது எனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் தான். நான் படித்தது தமிழ்வழியில் தான். தமிழில் படித்து விண்வெளி துறையில் சாதித்தீர்களா என்று என்னிடம் நிறைய பேர் கேட்டு உள்ளனர். தமிழில் படித்ததால் தான் நான் சாதித்தேன் என்று கூறினேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவின் முடிவில் கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்க செயலாளர் கார்த்தியாயினி நன்றி கூறினார்.

    Next Story
    ×