எனது வாழ்க்கை நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது: நீதிமன்ற வளாகத்தில் கெஜ்ரிவால் பேச்சு

9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை.கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கெஜ்ரிவால் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எனது வாழ்க்கை நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது: நீதிமன்ற வளாகத்தில் கெஜ்ரிவால் பேச்சு
Published on

டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார். நேரில் ஆஜராகாததால் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது.

இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கெஜ்ரிவால் வீட்டில் சோதனை மேற்கொண்டு, அதன்பின் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.

இன்று மதியம் டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து அரவிந்த் கெஜ்ரிவால், "என்னுடைய வாழ்க்கை நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஜெயிலில் இருந்து கொண்டு நாட்டிற்காக பணியாற்றுவேன்" என்றார்.

மதுபான கொள்கையில் மூளையாக செயல்பட்டவர் அரவிந்த் கெஜ்ரிவால். கொள்ளை மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டது. இந்த பணம் கோவா, பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com