தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்- லட்சத்தீவு முன்னாள் எம்.பி. உச்ச நீதிமன்றத்தில் மனு

மக்களவை செயலகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது
தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்- லட்சத்தீவு முன்னாள் எம்.பி. உச்ச நீதிமன்றத்தில் மனு
Published on

புதுடெல்லி:

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலை மக்களவை செயலகம் கடந்த ஜனவரி மாதம் தகுதி நீக்கம் செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து முகமது பைசல் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழ்கோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து  ஜனவரி 25ம் தேதி உத்தரவிட்டது. இதனால் லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சத்தீவு எம்பி. முகமது பைசல் மக்களவை செயலகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு மற்றும் 10 ஆண்டு சிறைத்தண்டனைக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தபிறகும், தகுதி நீக்கம் செய்யும் அறிவிப்பை மக்களவை செயலகம் திரும்பப் பெறவில்லை என முகமது பைசல் தனது மனுவில் கூறி உள்ளார்.

தகுதி நீக்கம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யாததால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நடப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com