மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு தடை: "Claude Fable 5" பயன்படுத்தக் கூடாது என வழக்கறிஞர்கள் எச்சரிக்கை!

"மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த கிளாட் ஃபேபிள் 5 மாடலை எந்தத் தடையுமின்றி தற்போதும் பயன்படுத்த முடிகிறது"
Microsoft's paying customers can still use this Claude Fable 5 model without any restrictions
Published on

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது சொந்த மென்பொருள் பொறியாளர்கள் அந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ மாடலான 'கிளாட் ஃபேபிள் 5' ஐப் பயன்படுத்துவதற்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது. இந்த மாடலின் தரவுப் பாதுகாப்பு விதிகள் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைகளுக்கு முரணாக இருப்பதால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சட்டக் குழு இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை, அந்த்ரோபிக் நிறுவனம் தனது முதல் 'மைதோஸ்-கிளாஸ்' மாடலான கிளாட் ஃபேபிள் 5 ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இது அந்நிறுவனம் இதுவரை வெளியிட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏஐ மாடலாகும். இந்த மாடல் வெளியான அடுத்த 24 மணி நேரத்திற்குள், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் பயன்படுத்தும் உள்வட்ட கிட்ஹப் கோபைலட் மென்பொருளின் 'மாடல் தேர்வு' பட்டியலில் இருந்து கிளாட் ஃபேபிள் 5 ஐ ரகசியமாக நீக்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களை இந்த மாடலை பயன்படுத்த வேண்டாம் என்று கூறுவதற்கு முக்கியக் காரணம் அதன் தரவுப் பாதுகாப்பு விதிகள் ஆகும். கிளாட் ஃபேபிள் 5 மாடலில் புதிய பாதுகாப்பு அம்சங்களை இயக்குவதற்காக, பயனர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் ஏஐ தரும் பதில்கள் அனைத்தும் அந்த்ரோபிக் நிறுவனத்தின் சர்வர்களில் 30 நாட்களுக்குச் சேமித்து வைக்கப்படும்.

ஏதேனும் விதிமுறை மீறல்கள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டால், அந்தத் தரவுகள் 2 ஆண்டுகள் வரை அந்த்ரோபிக் நிறுவனத்திடமே இருக்கும். மைக்ரோசாப்ட் போன்ற ஒரு மாபெரும் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் ரகசியத் தரவுகளையும், நிறுவனத்தின் உள்வட்ட குறியீடுகளையும் கையாள்வதால், இந்த 30 நாட்கள் கால அவகாசம் தங்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறும் என மைக்ரோசாப்ட் வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

முரண்பாடு:

கிளாட் நிறுவனத்தின் மற்ற மாடல்களான சோனட் 4.5, ஓபஸ் 4.1 மற்றும் ஹைகு 4.5 ஆகியவை ஜீரோ டேட்டா ரிடென்ஷன் (ZDR) விதியின் கீழ் இயங்குகின்றன. அதாவது, பயனர் கேட்கும் கேள்விக்கு ஏஐ பதிலளித்தவுடன் அந்தத் தரவுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். இதனால் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் மற்ற கிளாட் மாடல்களை தாராளமாகப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த கிளாட் ஃபேபிள் 5 மாடலை எந்தத் தடையுமின்றி தற்போதும் பயன்படுத்த முடிகிறது. ஏனெனில், வாடிக்கையாளர்களுக்கான தரவுப் பாதுகாப்பு விதிகளை மைக்ரோசாப்ட் நிறுவனமே நேரடியாகக் கட்டுப்படுத்துகிறது.

ஆனால், நிறுவனத்தின் சொந்த பொறியாளர்களுக்கு இந்தச் சலுகை இல்லாததால், அவர்கள் தற்போது லாக்-அவுட் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைக்கு, இந்த மாடலின் பாதுகாப்புத் தன்மைகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சட்டக் குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு முடிவடைந்த பிறகே, மைக்ரோசாப்ட் ஊழியர்கள் கிளாட் ஃபேபிள் 5 ஐ மீண்டும் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com