

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் சர்தானா பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 7 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் அவர் ஒரு வெள்ளை நிற திரவத்தைக் குடிப்பது போன்ற காட்சிகள் இருந்தன. அந்தப் பதிவின் கீழே "Be happy in your life" என்ற வரிகளையும் அவர் பகிர்ந்திருந்தார்.
ஒரு பயனர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தற்கொலை செய்துகொள்ளும் வகையிலான வார்த்தைகளையோ, வீடியோக்களையோ பதிவிட்டால் அதனை மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உடனடியாக கண்டறியும்.
இந்த வீடியோ பதிவிடப்பட்ட சில நிமிடங்களிலேயே மெட்டா நிறுவனம் உத்தரப் பிரதேச மாநில காவல் தலைமையகத்தில் உள்ள சமூக வலைதள பிரிவுக்கு எச்சரிக்கை அனுப்பியது.
மெட்டா கொடுத்த மொபைல் எண் மற்றும் ஐபி முகவரி ஆகியவற்றைக் கொண்டு, அந்த இளைஞர் இருக்கும் இடத்தை அடுத்த சில நிமிடங்களில் துல்லியமாகக் கண்டறிந்து காவல் தலைமையகத்தினர் மீரட் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மீரட் மாவட்ட சர்தானா பகுதி காவல் துறையினர் உடனடியாக அந்த இளைஞரின் வீட்டிற்கு விரைந்தனர்.
அங்குச் சென்று பார்த்தபோது, அந்த இளைஞர் விஷத்தன்மை கொண்ட திரவத்தை குடித்துவிட்டு உயிருக்குப் போராடும் நிலையில் மயங்கிக் கிடந்தார். அருகில் அந்த திரவ பாட்டிலும் கிடந்தது.
அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின், தற்போது அவரது உடல்நிலை தேறி, ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் காதல் தோல்வியால் கடந்த சில வாரங்களாகவே தீவிர மன அழுத்தத்தில் இருந்ததும் அதனால் தற்கொலை முடிவெடுத்ததும் தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளம் ஒரு இளம் உயிரைக் காப்பாற்றியுள்ள இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.