சந்தை மூலதனத்தில் பாகிஸ்தான் ஜிடிபியை கடந்த இந்திய தொழில் நிறுவனம்

இந்நிறுவனம் 2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் முன்னணியில் உள்ளதுபாகிஸ்தானின் ஜிடிபி $341 பில்லியன் என ஐஎம்எஃப் மதிப்பிட்டுள்ளது
சந்தை மூலதனத்தில் பாகிஸ்தான் ஜிடிபியை கடந்த இந்திய தொழில் நிறுவனம்
Published on

1868ல், இந்தியாவில் ஜம்ஷேட்ஜி டாடா (Jamshedji N. Tata) என்பவர் தொடங்கிய நிறுவனம், டாடா குழுமம் (Tata Group).

2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் டாடா குழுமத்திற்கு பல்வேறு துறைகளில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பல வர்த்தகங்கள் உள்ளன.

சுதந்திர இந்தியாவில் பல தொழில் நிறுவனங்கள் உருவாகியிருந்தாலும், தங்களுக்கென ஒரு நற்பெயரையும் முன்னணி இடத்தையும் டாடா குழுமம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு, டாடா குழுமத்தின் பல நிறுவனங்கள், லாபகரமான வருவாயை ஈட்டின.

தற்போது, டாடா குழுமம், சுமார் ரூ.31 லட்சம் கோடி ($365 பில்லியன்) சந்தை மூலதனத்தை வைத்துள்ளது.

இது இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை (Gross Domestic Product) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) அளித்த மதிப்பீட்டின்படி பாகிஸ்தானின் ஜிடிபி $341 பில்லியன் எனும் அளவில் உள்ளது.

மேலும் டாடா குழுமத்தின் ஒரு நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) எனும் முன்னணி மென்பொருள் நிறுவனம் மட்டுமே சந்தை மதிப்பில் ரூ.15 லட்சம் கோடி ($170 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பாதி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பங்கு சந்தையிலும், உலகளவிலும் டாடா குழுமத்திற்கு உள்ள வலுவான நிலையை இந்த ஒப்பீடு கோடிட்டு காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்தப்படும் தொழிலாளர் நலன் மற்றும் பணியிட மகிழ்ச்சி குறித்த ஆய்வுகளில் டாடா குழும நிறுவனங்களின் பெயர்கள் முன்னிலை வகிக்கின்றது.

2017லிருந்து டாடா குழுமத்தின் தலைவர் (Chairman) பொறுப்பில் உள்ள என். சந்திரசேகரன் (60), தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் நாமக்கல் மாவட்ட மோகனூர் தாலுகா அரசு பள்ளியில் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com