

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள தேவ்ரி கிராமத்தில் உள்ள உடல் தகனம் செய்யும் இடத்தில் 4 பேர் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தனர். அந்த இடத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு இது சந்தேகத்தை எழுப்பியது. இதனால் என்ன நடக்கிறது என்று பார்க்க, அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களில் 3 பேர் தப்பித்தால் போதும் என ஓடிவிட்டனர். ரிஷிகேஷ் குமார் என்பவர் மட்டும் சிக்கிக் கொண்டார்.
கிராம மக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது விநோதமான பதில் கிடைத்துள்ளது.
ரிஷிகேஷ் குமாரின் உறவினர் ஒருவர் கத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்றவர்களின் ஜாமின் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில்தான் தனது நண்பருக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்றால் மயானத்தில் சடங்கு செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளனர்.
இதனால் கத்திக்குத்தில் பாதிக்கப்பட்டவர், சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 பேர் படத்தை வைத்து, அத்துடன் மீன், எலுமிச்சை பழம், குங்குமம் வைத்து சடங்கு செய்துள்ளனர். போலீசார் சடங்குக்கான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற சடங்குகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இப்படி சடங்கு நடத்தினால் ஜாமின் கிடைத்துவிடாது. குற்றவாளிகள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.