என் மலர்
இந்தியா

டிக்கெட் எடுக்காமல் ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்கும் பொதுமக்கள் - பயணி புகார்
- புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கிய பயனர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
- இது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.
முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், முன்பதிவு செய்த பயணிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பான புகார்கள் அவ்வப்போது வந்துக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கு ரெயில் பெட்டிகள், ரெயில் ஓட்டுநர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களின் பற்றாக்குறை காரணமாக கூடுதலாக பெட்டிகளை அல்லது கூடுதலாக ரெயில்களை இயக்குவது என்பது ரெயில்வேயால் இயலாததாக மாறி உள்ளது.
இந்த நிலையில், ஸ்லீப்பர் பெட்டியில் அதற்குரிய டிக்கெட் எடுக்காமல் நிறைய பேர் பயணம் செய்த புகைப்படத்தை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இப்புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கிய பயனர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
இது ரெயில்வே அமைச்சகத்தின் ரெயில்வே சேவா சமூக ஊடகக் கணக்கின் கவனத்திற்கு சென்றது. இதை தொடர்ந்து, ரெயில் சேவா தனது சமூக வலைத்தள பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், "இது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். உங்கள் விவரங்களை நாங்கள் கேட்கிறோம்... DM மூலம்... விரைவான தீர்வுக்காக 139 என்ற எண்ணை டயல் செய்யலாம்" என்று கூறியுள்ளது.






