

மகாராஷ்டிரா மாநிலம் ஆலியாநகர் மாவட்டம் ரஹுரி பகுதியில் அமைந்துள்ள ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் புகுந்து கும்பல் ஒன்று, பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், கும்பல் வலுக்கட்டாயமாக தர்காவிற்குள் நுழைந்து, பச்சைக் கொடியை அகற்றி, அதற்குப் பதிலாக காவி கொடியை ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிலர் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிடுவதை கேட்க முடிகிறது. மற்றவர்கள் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்டபோது கைதட்டினர்.
"அவர்கள் தர்காவைத் தாக்கி அதன் மீது காவி கொடியை ஏற்றும்போது, போலீசார் அங்கேயே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தடுக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை" என சம்பவத்தின்போது அங்கிருந்த ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று முன் தினம் (மார்ச் 26) அன்று நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத்த அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.