search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் மக்களவையில் நிறைவேறியது
    X

    ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் மக்களவையில் நிறைவேறியது

    • எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது.
    • நிதி மசோதா-2023, நாளை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2023-24ல் மொத்த செலவினம் ரூ.45,03,097 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்த மூலதனச் செலவு ரூ.10,00,961 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதானி நிறுவன விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகளின் அமளி, ராகுல் காந்திக்கு எதிராக ஆளும் பாஜக எம்.பி.க்களின் போர்க்கொடி என பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் பணிகள் முடங்கின. இதனால் பட்ஜெட் மீது விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இன்றும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எனவே, மக்களவையில் விவாதம் இன்றி பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

    மக்களவையில் அடுத்தடுத்த ஒத்திவைப்புகளுக்கு பிறகு மாலையில் மீண்டும் அவை கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா, அரசின் செலவின திட்டத்தில் திருத்தங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. அதன்பின்னர் 2023-24க்கான மானிய கோரிக்கைகள் மற்றும் அதன் தொடர்புடைய நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் விவாதத்துக்கு முன்வைக்கப்பட்டன. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால், விவாதமின்றி மசோதா நிறைவேற்றப்பட்டது. பட்ஜெட் நிறைவேற்றப்பட்டபோது பிரதமர் மோடி அவையில் இருந்தார்.

    பட்ஜெட்டுக்கு பாராளுமன்ற ஒப்புதல் வழங்க தேவையான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நடைமுறை 12 நிமிடங்களில் நிறைவடைந்தது. இனி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்வைத்த வரி திட்டங்களை கொண்ட நிதி மசோதா-2023, நாளை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

    பட்ஜெட் தொடர்பான மசோதாக்கள் அனைத்தும் மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். மாநிலங்களவையில் மசோதாக்கள் மீது எந்த மாற்றமும் செய்ய முடியாது. மக்களவையில் மட்டுமே ஒப்புதல் தேவைப்படும் 'பண மசோதாக்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த மசோதாக்கள் விவாதத்திற்குப் பிறகு மக்களவைக்கு திருப்பி அனுப்பப்படும்.

    நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 6-ஆம் தேதி முடிவடைய உள்ளது. பட்ஜெட் நடைமுறைகள் முடிந்த பிறகு கூட்டத் தொடரின் காலம் குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×