search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் மேலும் ஒரு லெஸ்பியன் ஜோடி- தோழியை மீட்டு தரக்கோரி கோர்ட்டில் இளம்பெண் மனு
    X

    கேரளாவில் மேலும் ஒரு லெஸ்பியன் ஜோடி- தோழியை மீட்டு தரக்கோரி கோர்ட்டில் இளம்பெண் மனு

    • கேரளாவை சேர்ந்த இளம்பெண்கள் இருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானது.
    • கேரள ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஆதிலா மற்றும் பாத்திமா நூரா என்ற லெஸ்பியன் ஜோடி கோர்ட்டில் மனு செய்து சேர்ந்து வாழ்கிறார்கள்.

    கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஆதிலா-பாத்திமா நூரா லெஸ்பியன் ஜோடி சென்னையில் வசித்து வருகிறார்கள்.

    அவ்வப்போது இவர்கள் சமூக வலைதளத்தில் இருவரும் சேர்ந்திருக்கும் படங்களை பதிவேற்றம் செய்து அவற்றை வைரலாக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கேரளாவில் மேலும் ஒரு லெஸ்பியன் ஜோடி தங்களை சேர்த்து வைக்க கோரி கோர்ட்டில் மனு செய்துள்ளனர். ஆதிலா-பாத்திமா நூராவின் வழக்கு கேரள ஐகோர்ட்டிலேயே முடிந்து போக இந்த ஜோடியின் விவகாரம் டெல்லி சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்விபரம் வருமாறு:-

    கேரளாவை சேர்ந்த இளம்பெண்கள் இருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானது. இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து தங்கும் அளவுக்கு நெருக்கம் அதிகமானது. இதுபற்றி அறிந்த ஒரு பெண்ணின் பெற்றோர், தங்கள் மகளை, அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து வலுகட்டாயமாக அழைத்து சென்றனர்.

    அதன்பின்பு அவரால் தனது தோழியை சந்திக்க முடியவில்லை. இதனால் மனம் உடைந்துபோன பெண், தனது தோழியை தன்னோடு சேர்த்து வைக்க கோரி கேரள ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, பெற்றோருடன் இருக்கும் பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிட்டது. இது ஐகோர்ட்டில் மனு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே ஒரு லெஸ்பியன் ஜோடியை சேர்த்து வைத்த கேரள ஐகோர்ட்டு தங்களையும் அதுபோல சேர்ந்து வாழ அனுமதிக்கும் என்று எதிர்பார்த்த பெண்ணுக்கு கேரள ஐகோர்ட்டின் உத்தரவு ஏமாற்றத்தை அளித்தது.

    எனவே அவர் கேரள ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, கேரள ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் பெற்றோர் பிடியில் இருக்கும் பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரது கருத்தை கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை மூடி, முத்திரையிட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு சார்பில் பெண் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

    Next Story
    ×