ஆபாச உடை அணிந்திருந்ததால் குறிப்பிட்ட சட்டப்பிரிவு பொருந்தாது - எழுத்தாளருக்கு ஜாமீன் வழங்கியது கோர்ட்

2020 பிப்ரவரியில் எழுத்தாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஆபாச உடை அணிந்திருந்ததால் குறிப்பிட்ட சட்டப்பிரிவு பொருந்தாது - எழுத்தாளருக்கு ஜாமீன் வழங்கியது கோர்ட்
Published on

கோழிக்கோடு:

கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளரும் மாற்றுத் திறனாளியுமான சிவிக் சந்திரன் (74), தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அத்துடன், அந்தப் பெண் எழுத்தாளருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அந்த உத்தரவில், மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை வைத்துப் பார்க்கும்போது, புகார் அளித்த பெண் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆடை அணிந்துள்ளார். 74 வயதான மாற்றுத்திறனாளி நபர் பெண்ணை வலுக்கட்டாயமாக தனது மடியில் அமர வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக கூறுவதை நம்பமுடியவில்லை. அதனால் பாலியல் பலாத்கார வழக்குகளுக்கான சட்டப்பிரிவு 354ஏ குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொருந்தாது எனக்கருதி அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com