என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளா இடைத்தேர்தல்: 3 தொகுதிகளுக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை
    X

    கேரளா இடைத்தேர்தல்: 3 தொகுதிகளுக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை

    • பாலக்காடு தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ளுமா?
    • இடைத்தேர்தலில் களம் கண்ட பிரியங்கா காந்தி வெற்றிபெறுவாரா?

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

    வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவி யேற்றதால், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    அதேபோன்று செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதா கிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியிலும், பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    அவர்கள் இருவரும் அந்த தொகுதிகளின் எம்.பி.க்களாக பதவியேற்றனர். இதன் காரணமாக வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் காலியாகின.

    வயநாடு மற்றும் செலக்கரா தொகுதி களுக்கு கடந்த 13-ந்தேதி இடைத்தேர்தல் நடை பெற்றது. பாலக்காடு சட்ட மன்ற தொகுதிக்கு நேற்று முன்தினம் (20-ந்தேதி) இடைத்தேர்தல் நடத்தப் பட்டது.

    இந்தநிலையில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை (23-ந்தேதி) நடை பெறுகிறது.

    வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டி யிட்டனர். தேர்தலில் 64.69 சதவீத வாக்குகள் பதிவாகின.

    கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.


    இந்நிலையில் தற்போது நடந்த இடைத்தேர்தலில் களம் கண்ட பிரியங்கா காந்தி, அது போன்ற வெற்றியை பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அதேபோன்று செலக்கரா சட்டமன்ற தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், பாலக்காடு சட்ட மன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சியும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதும் நாளை தெரிந்து விடும். 3 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.

    Next Story
    ×