பெட்ரோல், டீசலை தொடர்ந்து பால் விலையும் திடீர் உயர்வு

கர்நாடக பால் கூட்டமைப்பு இன்று திடீரென பால் விலையை உயர்த்தியது. இந்தப் பால் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசலை தொடர்ந்து பால் விலையும் திடீர் உயர்வு
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை கடந்த வாரம் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து பா.ஜ.க. தீவிர போராட்டம் நடத்தியது. இதற்கு பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிதி ஆதாரங்களை திட்டும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் முதல் மந்திரி சித்தராமையா.

இந்நிலையில், கர்நாடக பால் கூட்டமைப்பு இன்று திடீரென பால் விலையை உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வை ஈடுசெய்யும் பொருட்டு அரை லிட்டர், ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுகளில் கூடுதலாக 50 மில்லி பால் சேர்க்கப்படும் என அந்தக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கூடுதலாக சேர்க்கப்படும் பாலுக்கு மட்டுமே இந்த விலையை உயர்த்தி இருப்பதாக அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

தற்போது ஒரு லிட்டர் பால் (நீல நிற பாக்கெட்) ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வகை பால் பாக்கெட்டுகளின் விலையும் இதே போல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பால் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இந்தப் பால் விலை உயர்வுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து பால் விலையையும் உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com