பெட்ரோல், டீசலை தொடர்ந்து குடிநீர் கட்டணமும் உயருகிறது

கடந்த 15-ம் தேதி முதல் கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.பெங்களூருவில் கடந்த 10 ஆண்டுக்கு முன் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.
பெட்ரோல், டீசலை தொடர்ந்து குடிநீர் கட்டணமும் உயருகிறது
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற ஓராண்டுக்குள் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களால் கர்நாடக அரசு நிதிச்சுமையில் சிக்கித்தவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி முதல் கர்நாடகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த கர்நாடக அரசும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குடிநீர் கட்டணத்தை உயர்த்த பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. பெங்களூரு நகர வளர்ச்சித் துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

புதிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு எந்த வங்கியும் நிதியளிக்க முன்வருவதில்லை.

70 சதவீதம் மின் கட்டணம் மற்றும் தொழிலாளர் செலவு. ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் ஒரு பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. இழப்பை ஈடுகட்ட மாதாந்திர குடிநீர் கட்டணத்தை உயர்த்த உள்ளோம் என தெரிவித்தார்.

பெங்களூரு நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2014-ம் ஆண்டு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com