குளிர்காலத்தில் இனச்சேர்க்கைக்காக துணையைத் தேடி 300 கி.மீ. பயணம் செய்த ஜானி புலி

குளிர்காலம் என்பது புலிகளின் இனச்சேர்க்கை காலமாகும். சில ஆண் புலிகள் பெண் புலிகளை தேடி நீண்ட பயணத்தை மேற்கொள்ளும்.
குளிர்காலத்தில் இனச்சேர்க்கைக்காக துணையைத் தேடி 300 கி.மீ. பயணம் செய்த ஜானி புலி
Published on

திருப்பதி:

மகாராஷ்டிரா மாநிலம் கின்வாட் வனபகுதியில் ஜானி என்ற 7 வயது ஆண் புலி சுற்றி திரிகிறது. இதை வனத்துறையினர் அடிக்கடி கண்காணித்து வருகின்றனர். கடந்த 30 நாட்களுக்கு முன்பு ஜானி புலி தனது துணைக்காக பெண் புலியை தேட ஆரம்பித்தது.

அந்த புலி நேற்று வரை 300 கிலோ மீட்டர் பயணம் செய்து தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் வனப்பகுதிக்கு வந்தது. ஆனாலும் இதுவரை ஜானி புலிக்கு துணையாக பெண் புலி கிடைக்கவில்லை. தனியாக தவித்தபடி தொடர்ந்து அதன் பயணத்தை நீடித்து வருகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

குளிர்காலம் என்பது புலிகளின் இனச்சேர்க்கை காலமாகும். சில ஆண் புலிகள் பெண் புலிகளை தேடி நீண்ட பயணத்தை மேற்கொள்ளும். கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு முன்பே பெண் புலிகள் சிறப்பு வாசனையை வெளியிடும். ஆண் புலிகள் வாசனை மூலம் பெண் புலியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து ஒன்று சேரும்.

ஜானி புலி கடந்த 30 நாட்களாக அடர்ந்த வனப்பகுதியில் அதன் ஜோடியை தேடி அலைகிறது. அதற்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை. இந்த பயணத்தின் போது 4 மாடுகளை அடித்து கொன்று சாப்பிட்டது. 3 மாடுகளை வேட்டையாட முயற்சி செய்துள்ளது.

காடுகளை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளிலும் நடமாட்டம் உள்ளது. சில இடங்களில் ஜானி புலி சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர்.

இதனால் மக்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. துணையை தேடும் புலிகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனாலும் பொதுமக்கள் புலியை கண்டால் தொந்தரவு செய்ய வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com