search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரும் ஜெ.தீபா: மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு
    X

    ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரும் ஜெ.தீபா: மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு

    • சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
    • அரசு கருவூலத்தில் சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை, தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாக நீதிபதி கூறினார்.

    பெங்களூரு

    சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பெங்களூரு செசன்சு கோர்ட்டில் நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஏற்கனவே கிரண் எஸ்.ஜவலி நியமிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்ற போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தரப்பில் வக்கீல் சத்யமூர்த்தி ஆஜராகி வாதிட்டார்.

    அப்போது ஜெயலலிதாவின் வாரிசு ஜெ.தீபா என்று கூறி சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அறிவித்து, சொத்துகளை ஒப்படைத்துள்ளது. எனவே கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் பொருட்கள், பிற உடைமைகளை தீபாவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

    இந்த வழக்கில் உங்களது தரப்பில் இருந்து முறையாக மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி கூறினார். மேலும் முறையாக மனு தாக்கல் செய்யும்படி தீபா தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    அதே நேரத்தில் நரசிம்மமூர்த்தி கூறியபடி அரசு கருவூலத்தில் சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை, தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாக நீதிபதி கூறினார்.

    இதையடுத்து, அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்கள் குறித்து கருவூல துறையிடம் முறையான ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதாக நரசிம்மமூர்த்தி கூறினார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×