பாதுகாப்பு குறைபாடு இருந்தது உண்மைதான்.. பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்கிறேன் - ஆளுநர் மனோஜ் சின்ஹா

அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.பாதுகாப்புப் படையினர் அங்கு தங்குவதற்கு இடமோ வசதிகளோ இல்லை.
பாதுகாப்பு குறைபாடு இருந்தது உண்மைதான்.. பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்கிறேன் - ஆளுநர் மனோஜ் சின்ஹா
Published on

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா முக்கிய கருத்துக்களை பேசியுள்ளார் .

ஐந்து ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு, தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், மனோஜ் சின்ஹா தனது தவறை ஒப்புக்கொண்டார்.

"இது பாகிஸ்தானால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல். இந்தத் தாக்குதல் காஷ்மீரின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வகுப்புவாதப் பிரிவினைகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அங்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்.

பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைப்பதில்லை என்பது காஷ்மீரில் பொதுவான நம்பிக்கை. இந்தத் தாக்குதல் திறந்தவெளி புல்வெளிகளில் நடந்தது. பாதுகாப்புப் படையினர் அங்கு தங்குவதற்கு இடமோ வசதிகளோ இல்லை.

இந்தத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் சூழல் முற்றிலும் மோசமடைந்துவிட்டதாகக் கருதுவது தவறு. இது நாட்டின் மீதான தாக்குதல். பாகிஸ்தான் காஷ்மீரில் அமைதியையும் செழிப்பையும் விரும்பவில்லை.

இருப்பினும், தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தகுந்த பதிலடியாக இருந்தன. பயங்கரவாதம் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதற்கு அவை சான்றாக இருந்தன. ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் எந்தத் தாக்குதல்களும் நடக்கவில்லை.

இருப்பினும், ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது" என்று மனோஜ் சின்ஹா கூறினார்.

இதற்கிடையில், மத்தியில் ஒருவரைப் பாதுகாக்க துணை நிலை ஆளுநர் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததாக காங்கிரஸ் விமர்சித்தது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு சட்டம் ஒழுங்கு துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com