தரையிறங்கிய அடுத்த வினாடி திடீரென டேக் ஆப் ஆன விமானம்.. பயத்தில் கதறி அழுத பயணிகள்

சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்று விமானி கூறியிருக்கிறார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

அகமதாபாத்:

சண்டிகரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன், இண்டிகோ விமானம் வந்தது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. ஆனால் ரன்வேயை தொட்ட அடுத்த வினாடி திடீரென வீமானம் மீண்டும் டேக் ஆப் ஆகி வானில் பறந்தது.

உள்ளே இருந்த பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கடும் குழப்பமும், அச்சமும் அடைந்தனர். சிலருக்கு உடல் வியர்த்து கொட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிலர் பயத்தில் கதறி அழுதுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம், அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. அதன்பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்றும், விமானத்தை தரையிறக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில் (ஏடிசி) அனுமதி கிடைக்கவில்லை என்றும் விமானி கூறியிருக்கிறார்.

எனினும், விமானி சரியான நடைமுறையை பின்பற்றினாரா, இல்லையா? என்பது குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com