என் மலர்
இந்தியா

ஆபத்தான கட்டத்தில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு!.. எச்சரிக்கும் நிபுணர்கள்
- 2020 முதல் உள்நாட்டு விமானங்களில் 2,461 தொழில்நுட்பக் குறைபாடுகள் பதிவாகியுள்ளன.
- குறிப்பாக, மூலதனச் செலவு 91% குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்கான ஒழுங்குமுறை அமைப்புகள் நிதிப் பற்றாக்குறை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, இந்த நீண்டகாலப் புறக்கணிப்பின் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் (MoCA) பட்ஜெட் கடந்த இரண்டு ஆண்டுகளில் 23% குறைந்துள்ளது. குறிப்பாக, மூலதனச் செலவு 91% குறைக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலைப் பாதிக்கும் என நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரித்துள்ளது.
விமானப் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தும் DGCA-வில் 48% (814 பணியிடங்கள்) காலியாக உள்ளன. இதனால், விமான நிறுவனங்களின் பாதுகாப்பு விதிகளை ஆய்வு செய்யும் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) மற்றும் பிற முக்கிய சேவைகளை வழங்கும் AAI-ல் 36% (9,502 பணியிடங்கள்) காலியாக உள்ளன.
நாட்டில் 5,537 ATCO (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்)தேவைப்படும் நிலையில், 3,924 பேர் மட்டுமே உள்ளனர். இது ஏறக்குறைய 30% பற்றாக்குறையாகும். இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு விபத்து அபாயம் அதிகரிக்கிறது.
அடுத்த பத்தாண்டுகளில் 30,000 விமானிகள் தேவைப்படும் நிலையில், இந்தியாவில் வெறும் 300 விமானிகளை மட்டுமே உருவாக்க முடிகிறது.
2020 முதல் உள்நாட்டு விமானங்களில் 2,461 தொழில்நுட்பக் குறைபாடுகள் பதிவாகியுள்ளன. இதில் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களில் 389 குறைபாடுகள் இருந்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 23 முறை விமானப் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்கள், இந்த நிதி மற்றும் ஆள் பற்றாக்குறை பயணிகளின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்றும், எதிர்காலத்தில் மேலும் விமான விபத்துகள் ஏற்பட வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.






