

உலகிலேயே மிக நீண்ட கூந்தலை கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைக்கு உத்தரகாண்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படைத்துள்ளார்.
சமீப காலமாக சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெண்கள், முதியோர் என பலதரப்பினரும் பல்வேறு வகைகளில் தங்கள் திறமைகளை நிரூபித்து கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.
அந்தவகையில் உலகிலேயே மிக நீண்ட கூந்தலை கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைக்கு உத்தரகாண்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படைத்துள்ளார். அவரது பெயர் ரேணு தரியல். யூட்யூபரான இவர் சமீபத்தில் உலகிலேயே மிக நீண்ட கூந்தலை கொண்டவர் என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரரானார். இவருடைய கூந்தலின் நீளம் 271.50 செ.மீ (8 அடி 10 அங்குலம்) ஆகும்.
ரேணுவின் கூந்தல் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் அலீயா நசிரோவாவை பின்னுக்குத் தள்ளி அவர் இந்த கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
அலீயா நசிரோவாவின் கூந்தலின் நீளம் 257.33 செ.மீ (8 அடி 5.3 அங்குலம்) ஆகும். ரேணு 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தனது முடியை வளர்த்து வருகிறார். இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
தனது சாதனை குறித்து ரேணு தரியல் கூறுகையில், நான் 2015 முதல் தொடர்ந்து என் முடியை வளர்த்து வருகிறேன். இந்திய கலாச்சாரத்தில், நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மிகுந்த அழகாகவும் கருதப்படுகிறது. இதுவே எனது முடியை இவ்வளவு நீளமாக வளர்க்க எனக்கு ஊக்கமளித்தது என்றார்.