

ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி அமைப்பு சென்றால் இந்தியா அழிந்துவிடும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
இன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய கூட்டணியின் துணை மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைத்த போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது. அந்த அமைப்பின் பெயர் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்).
கல்வி முறை அவர்களின் கைகளுக்குச் சென்றால் இந்த நாடு அழிக்கப்படும். யாருக்கும் வேலை கிடைக்காது, நாட்டை முடித்து விடுவார்கள். இது மிகவும் மெதுவாக தற்போது நடந்து வருகிறது.
இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆதிக்கத்தில் உள்ளனர் என்பதை மாணவர் அமைப்புகள் மற்றும் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மகா கும்பமேளா பற்றி பெருமையடித்தது குறித்து விமர்சித்த ராகுல்காந்தி, வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறித்து பிரதமர் பேசியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பிரதமர் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் கல்வி முறை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அவர்களின் மாடல், அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ்-க்கு தாரைவார்ப்பதாகும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் இந்தியா கூட்டணியின் மாணவர்கள். நமது சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் கல்வி முறையில் நாம் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. நாம் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடி ஆர்எஸ்எஸ்ஸை பின்னுக்குத் தள்ளுவோம் என்று ராகுல் காந்தி சூளுரைத்தார்.
இதற்கிடையே ஜந்தர் மாந்தரில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி விதிகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் பலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
#WATCH | Delhi Police detains NSUI workers protesting against NEP 2020, UGC draft rules, and paper leaks at Jantar Mantar. pic.twitter.com/HbqBhfcYMS